இரவு ஏழு மணி, அம்மா அருகிலிருக்கும் அம்மாச்சி வீட்டிற்கு போயிருந்தார்கள், வீட்டில் அந்த சிறுவன் மட்டும் தனியே இருக்கிறான். புது கலர் டிவி வாங்கி ஓரிரண்டு நாட்கள் தான் ஆகிறது. அவனுக்கு கதவு வைத்த அந்த பழைய டிவி தான் பிடிக்கும் என்றாலும், இந்த புது டிவியின் கலரும், ரிமோட்டும் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது, ரொம்ப நேரம் டிவி ரிமோட்டின் மெனுக்களை ஆராய்ந்தவாரே இருந்தவனுக்கு 'கார்ட்டூன் பார்க்கணும், அம்மா வந்தா அப்புறம் ஒரே சீரியல் தான்' என ஞானோதையம் வர கார்ட்டூன் சேனல் மாத்தி பார்க்க ஆரம்பித்தான்.
மெத்தை கட்டிலில் அமர்ந்து கார்ட்டூன் பார்த்து கொண்டிருந்தான், அவன் முன்னே கட்டிலில் ரிமோட் இருந்தது, டிவி சத்தத்தை தவிற வீட்டில் வேறெந்த சப்தமும் இல்லை. ஆர்வமாய் பார்த்து கொண்டிருக்கையில் திடீரென டிவி ஆஃப் ஆனது, ஃபேனும், லைட்டும் ஆனிலேயே இருக்கின்றன, கரண்டும் போகவில்லை, ரிமோட்டும் கையிலில்லை, ஆக தவறுதலாக ஆஃப் ஆகவும் வழியில்லை. இப்போது ஃபேன் சத்தத்தை தவிற தெருவிலேவையே வேறெந்த சத்தமும் கேட்கவில்லை. ஒருகணம் திகைத்து போனான்.
ஃபேனின் சப்தமும், தெருவின் நிசப்தமும், அவனுக்கு பயத்தை வரவழைத்தன. ஏதோ பேயி'தான் டிவியை ஆஃப் செய்திருக்கும் என யோசித்த மறுகணம் அந்த வீட்டிலிருக்க அவனால் முடியவில்லை, பூட்டை எடுத்து வீட்டை பூட்டி, முழு வேகத்தில் அம்மாச்சி வீட்டிற்கு ஓட ஆரம்பித்தான். அங்கு சென்றதும்தான், தான் மூச்சு விட்டுக்கொண்டிருப்பதையும், தன் இதையும் துடிப்பதையுமே அவனால் உணர முடிந்தது.
அமானுஷ்ய அனுபவத்தால் தன் வீட்டில் பேய் இருப்பதை உணர்ந்தபோது அவனுக்கு வயது பன்னிரண்டு.
புது கலர் டிவி ரிமோட்டில் 'ஆட்டோ ஆஃப்' மெனு உள்ளதை உணர்ந்தபோது அவனுக்கு வயது பதிமூன்று.
No comments:
Post a Comment